சூனா பானா என்றால் உங்களுக்கு தெரியும். ஆனா சூனா தெரியுமா ? ஆனந்த சுந்தரம் என்ற அழகான பெயரை சுருக்கி இப்படி ஆக்கிவிட்டார்கள் என் நண்பர்கள். ஆனா சூனா பார்பதற்கு “காதல் கொண்டேன் தனுஷ்” மாதிரி இருப்பான். படிப்பிலும் அப்படியே. ஆனால் வகுப்பில் விழித்து கொண்டே தூங்குவான் என்பதால் எந்த ஆசிரியரும் டஸ்டரை கொண்டு எறிய வில்லை.
இளிச்சவாயன் என்ற பதத்துக்கு பொருத்தமாக எப்போதும் இளித்த வண்ணம் இருப்பான். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கி கொள்வதில்லை. என் கடன் இளித்து கிடப்பதே என்பது போலவே இருப்பான். ஆச்சர்யமாக பெண்களை கண்டால் கஷ்டப்பட்டு இளிக்காமல் இருப்பான். மாலை ஏழுமணி ஆகிவிட்டாலே invisible man ஆகிவிடுவான். அப்படி ஒரு கார்மேகவண்ணன். சிரித்தால் தான் இவன் இருப்பது தெரியும். எப்போதும் கொஞ்சம் போல முள் தாடி இருக்கும். சட்டைய கழட்டிவிட்டு உட்கார்ந்தால் உங்களையும் அறியாமல் ஒரு ரூபாய் போட்டுவிட்டு செல்வீர்கள். அப்படி ஒரு தெய்வீக களை.
காலேஜ் சேர்ந்த புதிதில் ஒரு நாள் அவங்க வீட்டிற்கு சென்றேன். அவனுக்கும் அவங்க வீட்டும் சம்பந்தமே இல்லை. மதுரையின் முக்கிய வீதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்தது. ஆள பார்த்து எடை போடகூடாது என்பதை மீண்டும் வலியுறித்தியது அன்றையதினம்.
படிப்பில் எல்லாத்தையும் படித்து பரிட்சையில் வாந்தி எடுக்கும் ரகமல்ல. பாடத்தை விரும்பி படித்து புரிந்துகொண்டு பரீட்சை எழுதும் ரகம். கணினி ப்ரோக்ராம்-மில் பின்னி பெடல் எடுப்பான் . எந்த கணினி மொழி என்றாலும் பிரச்சனை இல்லாமல் வேலை பார்க்கும் திறன் படைத்தவன். செஸ் இவனுக்கு பிடித்த விளையாட்டு.
சந்திரசேகரை கிண்டல் பண்ணி, சிங்கத்திடம் அடி வாங்குவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இவனுக்கும் பெயர்தான் பிரச்சனை என்றாலும் அப்துலுக்கு அடுத்து என்பதால் பெரிதாக அலட்டிகொள்ளமாட்டன். இவனுக்கு போட்டி இவன் தம்பி. எல்லாத்திலேயும் அண்ணனுக்கு மிஞ்சின தம்பியாகத்தான் இருப்பான்.
இப்போது ஆனா சூனா பாரிசில் இருக்கிறான்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கல்லுரி நாட்கள் | குறிச்சொற்கள்: அனுபவம், மதுரை, மாணவர்கள் | Leave a Comment »









