பின் நவீனத்துவமும் மண்டை குடைச்சலும்.

பின் நவீனத்துவம் என்ற இந்த வார்த்தையை நான் முதன் முதலாக படித்தது சாருவின் வலை பக்கங்களில் தான். மாங்கு மாங்கு என்று பக்கம் பக்கமாக படித்தாலும் கடைசியில் பின் நவீனத்துவம் புரியவில்லை. என் சிற்றறிவுக்கு புரிந்தவரையில் கலை , கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் இதுகாறும் இருந்துவந்த கருத்தியல்களை கட்டுடைத்து “ஏன் இப்படி கோணலா இருந்தா என்ன தப்பு ? ” என்பது போல கேட்பது.

இதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு.  ஒரு கருத்து இருக்கும்போது அதுக்கு மாற்று கருத்து இருக்கலாம் , தவறில்லை. அதை பொது புத்தியுடன் ஏற்றுகொள்ள இது வழி செய்கிறது.

கெட்டது என்றால் வானத்திற்கு கீழ் இருக்கும் அத்தனையையும் இதே கோணத்தில் தான் பார்க்க வேண்டும். இல்லை என்றால் நீ இலக்கியம் தெரியாதவன், சராசரி, பாமர ஜனம், யோசிக்க தெரியாத கூட்டம் என்று பலப்பல பட்டங்களை நாம் பெற வேண்டி இருக்கும்.
தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது, பல பெண் உறவு , கன்னபின்னவென்று கோபப்படுவது போன்ற  ரொம்ப நல்ல(?) பழக்கங்கள்  எவ்வளவுக்கு எவ்ளோ இருக்கிறதோ அவ்வளவிற்கு நீங்கள் பெரிய பின் நவீனத்துவவாதி.

என்னடா கருமம் இது . நம்மள நல்ல இருன்னு சொல்றாங்களா இல்ல உருப்படாம போ என்று சொல்கிறார்களா என்று புரியாமலே வைப்பது பின் நவீனத்துவத்தின் சாதனை.

விக்கி பீடியா வரையறுத்த பின் நவீனத்துவம்

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.

கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

பின்னவீனத்துவம் என்பது நவீனத்துவத்துவத்துக்கான ஒரு மறுவினையாகும்.

இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.

ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.

இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

நான் ஒரு பின் நவீனத்துவம் கண்டுபிடிச்சிருக்கேன். நல்ல இருக்கானு பார்த்துட்டு சொல்லுங்க

ஒரு விசித்திரமான மனிதரை கவனிக்க ஆரம்பித்தேன்

என்-மகளும்-தமிழும்-3

நான் ஆனந்த விகடனில் மாணவ நிருபராக பணிபுரிந்த காலத்தில், எங்கள் பகுதியில் ஒரு விசித்திரமான மனிதரை கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் எந்த ஒரு வித்தியாசமான மனிதரையோ, நிகழ்ச்சியையோ பார்த்தால் இதை ஒரு செய்தி ஆக்க முடியுமா என்று தான் யோசிப்பேன். அந்த மனிதர் ஒரு விஷயத்தை மிக சரியாக செய்தார். அது தான் அவரை வித்தியாசபடுத்தியது.

அது இன்றைய மக்கள் வழக்கில் உள்ள தமிழை பேசாமல், தூய தமிழை பேசினார். அவரை பற்றிய விவரங்களை சேமித்த போது ஆச்சரியமும், வெட்கமும் அடைந்தேன். அவர் ஒரு சிறு வியாபாரி. பெட்டி கடைகளுக்கு சென்று மிட்டாய் ரக பொருட்களை விநியோகம் செய்பவர். இவர் எந்த கடைக்கு சென்றாலும் தூய தமிழில் தான் பேசுவாராம். ஆரம்பத்தில் சிரித்தவர்கள், பிறகு இவரிடம்(மட்டும்) அவர்களும் தூய தமிழில் பேசுகிறார்கள். தமிழில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இவரிடம் கேட்பார்களாம். வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததாம். பின்பு அவரை புரிந்து கொண்டு அவர்களும் அவ்வாறே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் அவர் எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கிறார். அதற்கு மேல் படிக்க குடும்ப சூழல் ஒத்துழைக்கவில்லை. இப்போது அவரது மகனும் தந்தை வழியில் தூய தமிழில் தான் பேசுகிறார். அதற்கு அவரது மகன் சொல்லும் காரணம் ” தூய தமிழில் பேசுவதால் என் தந்தையின் மீது வாடிக்கையாளர்களுக்கு பெருமதிப்பு உண்டு. அதை கண்டே தமிழின் அருமை புரிந்து பேசுகின்றேன்” என்றார்.

மதுரையின் வடகோடியான வண்டியூரில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பம் அவர்களுடையது. அவரது பெயர் மறந்து விட்டது. ஏனென்றால் அதை தூய தமிழ் பெயரில் மாற்றி இருந்தார். அவரது வாழ்க்கை நெறி எனக்கு பல விசயங்களை கற்றுகொடுத்தது. ஆயிரமாயிரம் சமரசங்களில் அதை நான் தெரிந்தே தொலைத்து விட்டேன்.

இன்று எனக்கொரு மகள் இருக்கிறாள். அழகான தமிழ் பெயரை வைக்கவேண்டும் என்று விரும்பி மீனாட்சி நாச்சியார் என்று வைத்தேன். அந்த பெயர் அவளுக்கு ஒரு அடையாளத்தை கொடுகிறது, கம்பீரத்தை கொடுக்கிறது. நாளை வளரும்போது அதை அவள் புரிந்துகொள்வாள். அதற்கு அட்சாரமாகத்தான் இன்று “மம்மி , டாடி” என்று அவள் அம்மா அழைக்க சொன்னாலும் “அம்மா , அப்பா ” என்றே அழைக்கிறாள் போலும். நான் தமிழை விரும்பகாரணம் அது என் தாய் மொழி என்பதனால் மட்டும் அல்ல , அது என் அடையாளம், என் முன்னோர்களின் அருள். எல்லாத்துக்கும் மேலே தமிழ் ஒரு இனிமையான மொழி. என்னால் இயன்ற வரை அதற்கு பெருமை சேர்க்க முயற்சிப்பேன். அல்லது அதற்கு இழிவு படுத்தாமலாவது இருப்பேன். இயன்றவரை என் மகளையும் அவ்வாறே வளர்ப்பேன்.

மலையாள சினிமாவின் நிரந்தர வில்லன் தமிழன் தானா ?

நமக்கு பதிவு போட கற்பனை வறட்சி ஏற்படும்போதெல்லாம் , கை கொடுப்பது சினிமா தான். ஏனென்றால் நான் தமிழன். இன்னைக்கும் சினிமாவ பற்றி தான் எழுத போறேன். எனக்கொரு சந்தேகம் , சந்தேகத்தை தீர்த்து வைத்தால் ஆயிரம் பொற்காசுகள் என்ன , கவரிங்க்காசுகள் கொடுக்க கூட நமக்கு டப்பு லேது. ஆதலால் ஆயிரம் பாராட்டுக்களை தர சம்மதிக்கிறேன்.

99% மலையாள படங்களில் , ஏன் தமிழர்களை வில்லனாகவும், காமெடியனாகவும் , அடிவாங்குபனாகவும் காட்டுகிறார்கள் ? நேற்று Asianet – இல்  நான் பார்த்த மலையாள படத்திலும் வில்லன் தமிழன் தான். மோகன்லால் அவனது நெஞ்சில் மிதித்து , அடித்து விரட்டுவார் ? தமிழ் சினிமாக்களில் மலையாளிகளை சிறப்பான தோற்றத்தில் காண்பிக்கும் போது மலையாள சினிமா மட்டும் தமிழர்களை மட்டமான பத்திரத்தில் காண்பிக்க வேண்டும் ? மக்கள் அவ்வாறு தான் விரும்புகிறார்களா ? அப்புறம் ஏன் டப்பிங் கூட பண்ணாமல் வெளியிடும் தமிழ் படங்களை கேரளாவில் சூப்பர் ஹிட் ஆகிறது ? ஏன் தமிழ் பாட்டுகளை விரும்பி கேட்கிறார்கள் , அதை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பாடவும் செய்கிறார்கள் , ஆடவும் செய்கிறார்கள் ? மலையாள நடிகர்களை , இயக்குனர்களை பேட்டி எடுக்கும் தமிழ் பத்திரிகைகள் இந்த தவறை ஏன் சுட்டி காட்டுவதில்லை ? சினிமா மக்களின் நெருக்கமான ஊடகம். இப்படியான ஊடகத்தில் ஒரு இனத்தை பற்றிய தவறான பிம்பத்தை நெடுங்காலமாக பரப்புவது தவறில்லையா ?

வழக்கம் போல சராசரி மலையாளிக்கு, எந்த இன துவேசமும் இருக்கவில்லை , மலையாள சினிமாவிற்கு தான் தமிழ் சினிமாவின் மீது எரிச்சல். அந்த எரிச்சலே இப்படியான பாத்திர படைப்புகளுக்கு காரணமாகிறது. அதை மலையாள திரை மன்னாதி மன்னர்களான மம்மூட்டியும் , மோகன்லாலும் கூட தப்பாமல் செய்கிறார்கள்

என் மகளும் தமிழும்-2

தமிழை போல பழமையான, இன்றும் வாழும் மொழிகள் என்று பார்த்தால், சீனாவின் மண்டரின் மொழியும், யூதர்களின் ஹீப்ரூ மொழியும் ஆகும். இதில் மண்டரின் மொழியின் ஓசை நமது சமஸ்கிருதத்தை போல ஹீ, ஹூ, ஷா, ஹ என்று காற்று உரசி செல்வது போல இருக்கும். ஹீப்ரூவும் அப்படியே.. ஆனால் ஹீப்ரூ தமிழை போலவும் அழுத்தமான ஓசைகளையும் கொண்டிருக்கும்.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஆதி மனிதனின் மொழி எங்கிருந்து பிறந்திருக்கும் என்று ? இயற்கையிலிருந்து தானே. இயற்கையின் ஒரு அங்கமான விலங்குகளிடம் இருந்தும், சக மனிதர்களின் ஓசையில் இருந்தும் தான் மொழி பிறந்திருக்கும். உலகின் எல்லா மொழிகளிலும் தாய் , தந்தையை அழைப்பது பொதுவான ஓசை உச்சரிப்பில் தான். அம்மாவிற்கு “மா” என்ற ஓசையும் , அப்பாவிற்கு “பா” என்ற ஓசையும் தான் வழங்கபடுகிறது. அதிலும் தமிழ் தான் சிறப்பான உச்சரிப்பை கொடுத்துள்ளது. எந்த குழந்தையாவது பேச தொடங்கும் போது “மதர்” என்றோ “மாதாஜி” சொல்வதுண்டா.. ஆனால் அம்மா என்று அழகாக சொல்லும். யாரும் சொல்லிகொடுக்க வேண்டியதில்லை.

ஒருமுறை என் குழந்தை , குயில் கூவுவதை பார்த்தாள். அதிலிருந்து எந்த பறவையை பார்த்தாலும் கூ.. கூ.. என்று கூறுவாள். குயில் என்ற பெயர் அது எழுப்பும் கூ என்ற ஓசையில் இருந்து தானே வந்திருக்க வேண்டும். இது போல் ஓராயிரம் உதாரணங்களை தமிழில் சொல்ல முடியும். சில வடிவங்களை, செயல்களை பார்க்கும்போது மனித மனத்தில் அந்த வடிவத்திற்கு, செயலிற்கு ஏற்ற ஓசை எழும். அதுவும் மொழியாக பரிணமிக்கும். நீங்கள் சினிமா பார்க்கும் போது  பின்னணி இசையில் காட்சியோடு ஒன்றி போவது இதனால் தான்.

எனக்கென்னவோ உலகத்தில் உள்ள எல்லா பழங்குடி மக்களின் மொழிக்கும், தமிழிற்கும் நிறைய சொற்தொடர்பு இருக்க வேண்டும். ஆராய்ச்சி செய்தால் நிறைய விஷயங்கள் தெரிய கூடும்.

தொடரும்

என் மகளும் தமிழும்

தமிழின் தொன்மையும், ஆழமும் பாட புத்தகங்களில் , வரலாற்று கதைகளில் , அறிஞர்களின் பேச்சினில் நிறைய படித்திருக்கிறேன். விக்கிபீடியா சொல்லும் கணக்குப்படி 2500 வருடங்களுக்கும் மேலான பழமையான மொழி என்கிறது. 4000 வருடங்கள் பழமையான மொழி என்று தமிழ் தாத்தா  உ. வே.சாமிநாத ஐயர் சொல்லியிருக்கிறார். சில வரலாற்று நூல்கள் சொல்லும் கணக்கை பார்த்தால் 6000 வருடத்தை தொடும் என்று தோன்றுகிறது.

tamil

ஆனால் நான் சொல்லும் கணக்கு கொஞ்சம் விசித்திரமானது. என் கணக்குப்படி தமிழ் 10,000 வருடங்களுக்கு மேலான  பழமையான ஆதி மொழி. உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழி என்றே சொல்வேன். மனிதன் பேச ஆரம்பித்த காலம் தொட்டு பிறந்து வளர்ந்த மொழி என்று சொல்வேன். என்ன ஆதாரம் ? நாம் தான் ஆதாரம் . நம் குழந்தை தான் ஆதாரம்.

என் மகள் மீனாட்சி இப்போது பேச முயற்சிக்கிறாள். அவள் பேசிய முதல் சொல் ம்ம்மா . பின்பு சிறிது நாள் கழித்து அம்மா.. என்று அழகாக சொல்ல ஆரம்பித்தாள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா.. என் மனைவி தன்னை மம்மி என்று தான் அழைக்க சொல்வேன் என்று  என் குழந்தையை பார்த்து மம்மி.., மம்மி சொல்லு என்பாள். என் மகளோ அம்ம்மா என்று அழுத்தி உச்சரிப்பாள். எனக்கு இது வேடிக்கையாக இருக்கும்.

பிறகு சிறிது நாள் கழித்து அப்பா என்றும் அழைக்க ஆரம்பித்தாள். ஒரு அப்பன் தன் குழந்தை தன்னை அப்பா என்றழைக்கும் முதல்  தருணத்தில் அடையும் சந்தோசத்திற்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. அந்த தருணமும் வந்தது. மீண்டும் அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் ஊடல் ஆரம்பித்தது. என் மனைவி டாடி சொல்லு என்பாள். என் மகளோ அபா என்றோ அப்பா என்றோ தான் சொல்வாள். நான் இங்கிட்டு வேலை பார்த்துகொண்டிருக்கும் போது, நீ அங்கிட்டு அப்பா சொல்லுன்னு குழந்தைகிட்ட சொல்லிகொடுத்திருக்க ? என்று என்னிடம் சண்டை பிடிப்பாள். நான் சிரித்து கொண்டே அவள் என் பிள்ளை என்பேன்.

பிறகு அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உறவுகளை குறிப்பதாக தான் இருந்தது, தாத்தா, மாமா , அத்தை , பாப்பா என்று . இத்தனைக்கும் எங்கள் உறவுகள் இருப்பதோ மதுரையிலும் ராமநாதபுரத்திலும், நாங்கள் இருப்பதோ கர்நாடகத்தில்.

இப்போது புதிதாக இரண்டு வார்த்தைகள் சொல்கிறாள். அந்தா.. , இந்தா – என்பன அவை. வெளியே போகவேண்டும் என்றாலோ , எதையாவது எடுக்க வேண்டும் என்றாலோ அந்தா.. என்று சொல்வாள். எங்களுக்கு எதைவது கொடுக்கும் போதோ , ஊட்டிவிடும் போதோ இந்தா இந்தா என்பாள்.

மற்ற மொழிகளுக்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். மற்ற மொழிகள் , பிற மொழிகளில் இருந்து சொற்களை பெறும்போது தமிழ் மட்டும் மனித வாழ்கையில் இருந்து இயல்பான ஒலியில் தருவித்து கொண்டது.

 

இன்னும் வளரும்..

படித்ததில் பிடித்தது – 1

சில மாதங்களாக நான் எதுவும் எழுதவில்லையே தவிர, நிறைய படித்தேன் , கவனித்தேன் , யோசித்தேன், தீர தாகத்துடன் படித்துக்கொண்டே இருந்தேன். என்னை அதிகம் பாதித்த , மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய வலைத்தளங்களையும் வலை பூக்களையும் இங்கே பட்டியல் இட்டு இருக்கிறேன்.

மாதவராஜ் – இவரின் தளம் என்னை மிகவும் கவர்ந்த தளங்களில் முதன்மையானது. எளிமையான எழுத்து நடை , அழகியல் உணர்வு , ஆழமான கருத்துகள் , நடுநிலையான சிந்தனை, பண்பாடு மிக்க எழுத்து என்று எத்தனையோ விசயங்களை சொல்லலாம். இவரது எழுத்தில் இதுவரை தனிமனித விரோதம் , தரக்குறைவான வார்த்தை என்று எங்கு தேடினாலும் கிடைக்காது. மிக சில கட்டுரைகளில் மட்டும் எனக்கு முரண்பாடு உண்டு. இவரின் சிறுகதைகள் வெறும் கதையாக இல்லாமல், சிந்திக்க தூண்டுபவையாக இருக்கும். ஒரு வலை பூ எப்படி இருக்க வேண்டும் இதைவிட சிறந்த உதாரணம் இல்லை.

சுவாமிஜி ஓம்கார் – எத்தனையோ ஆன்மிக புத்தகங்கள், கட்டுரைகள், கதைகள் படித்திருக்கிறேன். ஆனால் எதிலும் உணராத மன நெருக்கம் இவரின் இந்த தளத்தில் உணர்ந்திருக்கிறேன். எனது மனதில் நிலைத்திருந்த பல புதிரான கேள்விகளுக்கு இந்த தளத்தில் தெரிந்து கொண்டேன். கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கடவுள் உண்ணுவாரா ? – இந்த கேள்வி சிறுபிள்ளைதனமாக இருக்கும். தெளிவான பதில் இருக்காது நம்மிடம். இவரது மற்றொரு தளமான குரு கதைகள் தளத்தில் எனக்கு விடை கிடைத்தது. இந்த துணை தளத்தில் ஏராளமான சாவிகள் உண்டு. இவற்றை கொண்டு நம் மனங்களின் திறக்கப்படாத பல கதவுகள் திறக்கலாம் .

Webdunia Tamil – பல செய்தி தளங்களுக்கு சென்று சோர்வு கொண்ட போது yahoo Tamil மூலமாக இந்த தளத்திற்கு வந்தேன். சரியான கோணத்தில் தெளிவான செய்திகளை தாங்கி இருந்தது. இந்த தளம் வார இதழாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும். இதன் கட்டுரை பகுதியில் உள்ள அனைத்து கட்டுரைகளும் சிறப்பாக இருந்தது. கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் தான் இதன் குறை. வேறு வழி இல்லை. விளம்பரங்கள் தானே அவர்களுக்கு பெட்ரோல்.

கட்டபொம்மன் – இவர் ஒரு போலீஸ் அதிகாரி. இவர் பணியில் இவர் அடைந்த அனுபவங்களை பதிவு செய்வார். ஒவ்வொரு பதிவும் பொதுமக்களுக்கு ஒரு பாடம் என்று சொன்னால் அது மிகை இல்லை. நகைப்பூட்டும் எழுத்து நடை. குறைவான பதிவுகள் தான் ஒரே குறை. இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். காவல் துறையிலும் நல்ல இதயங்கள் உண்டு. அவர்களின் கட்டாயங்கள் , நெருக்கடிகள் பொது மக்கள் அறியாதவை. அவர் தான் அதை அறிய படுத்த வேண்டும்.

டிஸ்கி : நான் இதுவரைக்கும் இவர்களின் 90% பதிவுகளை படித்திருந்தாலும், தினமும் ஒரு முறையாவது இவர்களின் தளங்களுக்கு சென்றாலும் இது வரை ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை.

நான் ஏன் பதிவு போடவில்லை ?

ரெம்ப நாள் கழித்து ஒரு பதிவு போடுகிறேன். நான் பதிவு போடவில்லை என்றால்  ஏன் , எதற்கு போடவில்லை என்று யாரும் கேட்கபோவதில்லை. வாசகர் வட்டம் , மாவட்டம் எல்லாம் நமக்கு இல்லை. என் மாப்பிள்ளை வைத்தி மட்டும் அவ்வப்போது தேடி படிப்பான். மற்றபடி குறிப்பிடத்தக்க வலை உலக  நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் பதிவு போட முடியவில்லையே என்ற பதட்டம் என்றும் இருந்த்ததில்லை.

3595662973_335e0e5641_o

தொடர்ச்சியாக பதிவு போட்டுக்கொண்டிருந்த நான் ஒரு பெரும் இடைவெளி விட்டதிற்கு காரணங்கள் சில.

௧) ஈழப்பிரச்சனையில் இந்த நூற்றாண்டின் பெரும் இனபடுகொலை நடந்தும் , அது குறித்த கவலையோ , பதட்டமோ, கோபமோ எதுவும் இல்லாமல், உணர்ச்சிகள் அற்று போன ஒரு சமுதாயத்திடம் என்ன பேசுவது

௨) இது நாள் வரை என் உடம்போடும், குருதியோடும் ஊறிப்போன சில நம்பிக்கைகள் எல்லாம் பொய் எனத் தெரிந்த்தத்தில் உண்டான அதிர்ச்சி இன்னும் போக வில்லை.

௩) குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட தொலைந்து போன அரசியல் தலைவர்களையும், மக்களையும் கொண்ட ஒரு சமுகத்தில் வாழ்கிறோம் என்ற பேரதிர்ச்சி.

௪) மனம் ஆறிபோகவும், பக்குவபடவும் சிறிது காலம் தேவைப்பட்டது.

இந்த இடைவெளியில் என் தோழி துர்காவுக்கு ஒரு கடிதம் அல்லது ஈமெயில் கூட அனுப்பவில்லை. அவள் அனுப்பிய ஒரு ஈமெயில் க்கு ஒரு வரி பதில் கூட அனுப்பவில்லை. இத்தனைக்கும் அவளுக்கும் எனக்குமான நட்பு கடிதத்திலும், ஈமெயில் இலும் தான் பத்தாண்டுகாலதிற்கும் மேலாக தொடர்கிறது.

ஈழத்தை பொறுத்த வரையில் துயரம் துயரமாகவே கரைந்து போனதே ஒழிய நிம்மதியாக நம்பிக்கையாக மாறவே இல்லை.

என்றாவது ஒரு நாள் இதற்கு காரணமானவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த பதில் அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலம் அவர்களை ரத்த வெறி பிடித்த மிருகங்கள் என்று தான் சொல்லும்.

டார்க் லாண்ட் போகவேண்டும் டாடி

(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )

8:30AM, April 11,2030 .

டார்க் லாண்ட் போகவேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. எங்கள் என்பதன் அர்த்தம் நானும் என் மகளும் மட்டுமே . என் மனைவி இந்த மாதிரியான பயணம் மேற்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள் அல்ல என்பதால் அவள் இதில் சேர்த்தி இல்லை. இப்பவும் கூட நாங்கள் நியுசிலாந்து போறோம் என்று தான் அவளிடம் சொல்லி இருக்கிறோம். இல்லையென்றால் பயத்திலேயே பாதி உசிரை விட்டு விடுவாள்.

எங்கள் பயணத்திட்டமே ஒரு சுவாரஸ்யமான கதை. மீனு குட்டிக்கு பன்னிரண்டு வயது இருக்கும் போது Gmap இல் பயணம் செய்துகொண்டிருந்த போது சேது சமுத்திரத்தின் Adam பாலத்தை கண்டு என்னிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அவள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை மட்டும் சொல்லாமல் அதனுடன் தொடர்புடைய எல்லா விசயங்களையும் சொல்ல ஆரம்பித்து விடுவேன். அன்றும் அப்படித்தான் ராமாயணத்தில் ஆரம்பித்து ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருந்தேன்.

கொஞ்சம் பொறுங்கள் . Air Taxi வரும் சத்தம் கேட்கிறது. எங்கள் வீட்டிற்கு Air Taxi வரும் அளவுக்கு இடம் கிடையாது என்பதால் பக்கத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் இறங்கும் என்று காலையிலேயே VMS ( Video Message Service ) வந்துவிட்டது. Air Taxi  இப்போது தான் இந்தியாவுக்கு அறிமுகமாகி இருக்கிறது என்பதால் யாழ் Airways முதல் வகுப்பு டிக்கெட் வாங்கும்போது இலவச இணைப்பாக இந்த சேவையை கொடுத்திருக்கிறார்கள். Air Taxi இல் ஏறினால் பத்துநிமிடத்தில் விமான நிலையம் சென்று விடலாம் . அங்கிருந்து யாழி என்கிற ஈழ நாட்டின் விமானத்தை பிடித்து விடலாம். அங்கிருந்து 30 நிமிட பயணத்தில் யாழ் பாண விமான நிலையத்தை அடைந்து விடலாம். மீண்டும் 10 நிமிட  Air Taxi பயணம். டார்க் லாண்ட் என்று சொல்லப்படும் முள்ளிவாய்கால் வந்து விடும். எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது.

அவ்வாறு அன்று ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருக்கும் போது முள்ளி வாய் கால் மாபெரும் மனித படுகொலையையும் அவள் மனம் துயருராத வகையில் மறைத்தும் மறைகமலும் சொல்லிவந்தேன். அன்று ஆரம்பித்தாள் கச்சேரியை டார்க் லாண்ட் போகவேண்டும் என்று. கடந்த ஒன்பது வருடங்களாக இந்த அந்தா என்று இழுத்து கொண்டிருந்தாலும் விடாமல் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். ” The dark land” என்று சமிபத்தில் வெளிவந்த British திரைப்படம் 11 Oscar Awards வென்று உலகெங்கும் சக்கை போடு போடுகிறது.

எனக்கும் உள்ளுர ஆசை இருந்தாலும் , அந்த இடத்தை நேரில் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் ஆண்டுகளை கடத்தி வந்தேன். அதற்குள் ஆண்டுகள் பலவாகி ” நீங்கள் கூட்டிசெல்கிறீர்களா  இல்லை நானே செல்லட்டுமா” என்ற அளவுக்கு வரவும் வேறுவழியின்றி கூட்டி செல்ல முடிவெடுத்தேன்.

இப்போது கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கிறோம் என்ற அறிவிப்பு வந்தது. கூடவே எங்கள் இருக்கையின் முன் உள்ள பிளாஸ்மா டிஸ்ப்ளே இல் சேது சமுத்திரத்தின் கடலையும் அதில் தெரியும் ராமர் பாலமும் தெரிகின்றது. மீனு குட்டி டிஸ்ப்ளே இல் ஜூம் பண்ணி பார்த்தாள். மிதக்கும் பாறைகளை பற்றிய இணைய தொடர்பை தட்டினாள். அறிவியல் விளக்கங்களும் ஆன்மிக விளக்கங்களும் அடுத்தடுத்து வந்தன. அதை முழுதாக  வாசித்துகொண்டிருக்கும் போதே ” யாழ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். உங்கள் இருக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அறிவிக்கவும். நாங்கள் இருக்கையில் சாய்ந்து உட்கார அதுவே எங்கள் கைகளையும் கால்களையும் எலாஸ்டிக் வளையங்களால் பிணைத்தது. தரை இறங்கியதும் தானாக விடுவித்தும் விட்டது. இதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. மீனு குட்டி எரிச்சல் பட்டுகொண்டாள்.

“எவன் இதை கண்டுபிடிச்சான் அவனை இந்த சீட்டில் உட்கார வச்சு கடல்ல தள்ளனும்” என்றாள். அவளுக்கு இதுமாதிரி எல்லாம் பாதுகாப்புக்கு கூட  பிணைக்கப்பட்டு இருந்ததில்லை. காரில் கூட சீட் பெல்ட்டை அறுத்து எறிந்தவள். பிடிவாதம் அவள் உடன் பிறப்பாக இருந்தது.

யாழ் விமான நிலையத்தில் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளிவந்து Air Taxi ஐ பிடித்தோம். இதை நான் ஆச்சர்யமாக மீனுவிடம் சொன்ன போது அவள் சிரித்தாள். “டாடி இதுவரை உங்களை 18 தடவை சோதித்து விட்டார்கள் உங்களுக்கே தெரியாமல். பின்ன எதுக்கு இவ்ளோ  பெரிய  Fiber Passing Tube இல் வந்தோம் அழகுக்கு என்றா நினைத்தீர்கள்.?” என்றாள் . சிரித்துக்கொண்டேன்

Air Taxi நாங்கள் நினைத்ததை விட வேகமாக பறந்தது. ” தியாக  பூமி உங்களை அன்புடன் வரவேற்கிறது ” என்ற அறிவிப்பு பலூன் எங்களை கடந்து சென்றது. இறங்கினோம். மணியை பார்த்தேன் 10:30AM, April 11,2030 . இன்று மாலையே திரும்ப இருப்பதால் எந்த சுமையும் எடுத்துவரவில்லை. 64X Digicam மட்டுமே மீனுவின் கையில் இருந்தது. அது கூட கொண்டுவர எனக்கு பிடிக்கவில்லை. மீனுவின் விருப்பமே அது. மீனு Digicam ஐ ஆன் செய்த போது சொன்னேன் ” மீனு , இது தியாக பூமி . உணர்வு பூர்வமாக பார்க்க வேண்டிய இடம் . காமரா கண்ணில் பார்த்தால் உணர்வு மறந்து போகும். அதை தான் விரும்புகிறாயா ” என்றேன்.

ஒரு வினாடி யோசித்தவளாய் “Sorry daddy ” என்று சொல்லி கேமராவை தன் பாக்கெட்டில் வைத்துகொண்டாள். அது தான் அந்த இடத்தில் அவள் பேசியது. அதன் பிறகு பேசவே இல்லை. நான் பேச வந்த போது கூட பேச வேண்டாம் என்று சைகையில் சொல்லி தடுத்து விட்டாள். அருங்காட்சியகம் , புகைபட காட்சியகம், அருங்காட்சியக  திரை அரங்கம் என்று எங்கு சென்ற போதும் அவள் வாயே திறக்க வில்லை. ஆங்கங்கே  காணப்படும் செப்பு சிலைகள் பார்வையாளர்களை மனத்துயரில் ஆழ்த்தும் அழகுடன் இருந்தன. ஒரு சிலையின் முன் அவள் வெகு நேரம் நின்றாள். குண்டடிபட்டு இறந்த தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் அருந்துவது போல அமைக்கப்பட்ட சிலை, இல்லையில்லை துயரம்.

அங்கிருந்த சிற்றுண்டி இல் உணவருந்தும் போது , அவளிடம் கேட்டேன் ஏன் அந்த சிலை முன் அவ்வளவு நேரம் நின்றாய் ” என்று .
” அப்பா.. ( பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவள் என்னை அப்பா என்று அழைக்கிறாள் . இல்லை என்றால் எப்பவும் டாடி தான் ). என்னை எதுவும் கேட்காதீர்கள் அப்புறம் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது போய் விடும் ” என்றாள். அதன் பிறகு நான் எதுவும் கேட்கவில்லை.

அதன் பிறகு நாங்கள் சென்ற இடம் எங்கள் இதயத்தை ஒரு கணம் நிறுத்துவதாக இருந்தது. 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த 22,000 சமாதிகள். ஒவ்வொரு சமாதிக்கும் ஒரு கதை இருந்திருக்கும். ஆனால் எல்லோர் கதைகளின் முடிவு மட்டும் ஒன்றாக இருந்தது தான் பெரும் துயரம்.

பிறகு இன்னும் சில இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. துப்பாக்கி குண்டுகளால் சல்லடை ஆக்கப்பட்ட மருத்துவமனை, ரத்தத்தில் தோய்ந்த்த பதுங்கு குழிகள் என்று சில நினைவிடங்களுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் மனதின் சுமையை கூட்டிக்கொண்டே தான் போக வழி இருகிறதே ஒழிய , அங்கே குறைக்க வழி இல்லை. அதனால் திரும்புவது என்று முடிவெடுத்து அவளிடம் கேட்டேன். சரி என்று மெளனமாக தலை அசைத்தாள்.

திரும்பும் வழி எங்கும் அவள் ஒரு வார்த்தை பேச வில்லை. ஏன் என் முகத்தை கூட பார்க்க வில்லை. யாழ் விமானம் மண்ணை விட்டு விண்ணுக்கு கிளம்பியது. சீட் பெல்டின் இறுக்கம் தளர்ந்தது என்றாலும் மனதின் இறுக்கம் அப்படியே தான் இருந்தது. ஒரு கணம் மீனு குட்டி என்னை பார்த்தாள். ஏதோ கேட்க வருகிறாள்.

“இங்கே போர் நடந்தபோது உங்களுக்கு என்ன வயசு ? “

“முப்பது வயது இருக்கும் . நீ அப்போ எட்டு மாத குழந்தை ” என்று பழைய புராணத்தை எடுத்து விட எத்தனித்த போது

“போதும் உங்கள் கதை. இங்கே போர் நடக்கும் போது, இதுமாதிரி ஒரு ஒரு.. சொல்ல முடியாத அளவு பெரும் கொடூரம் நடக்கும் போது நீங்கள் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் “

“என்னால் என்ன முடியும். blog இல் என் மனத்துயரை கொட்டி ஒரு பதிவு போட்டேன். “

“உங்களை நினைத்தால் எனக்கு ரெம்ப வெட்கமா இருக்கு டாடி” என்று சொல்லிவிட்டு ஜன்னலின் வழியே ஈழத்தை மறையும் வரைக்கும் பார்க்க தொடங்கினாள்

அன்று காத்த அதே மௌனத்தை  இன்றும் காக்கிறேன் ஒரு மரம் போல .

A.R.ரஹ்மானும் , நகைச்சுவை காட்சியும்

இளையராஜாவின் சிறந்த பின்னணி இசை பற்றிய முந்தைய பதிவிற்கு பின்னோட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் சொன்ன அனைத்து படங்களையும் சேர்த்துவிட்டேன். விடுபட்ட படங்களை தொடர்ந்து அனுப்புங்கள் . இளையராஜாவின் சிறந்த பின்னணி இசையை வெறும் பத்து எண்ணிக்கைக்குள் அடக்க நினைத்தது மாபெரும் தவறு என்று புரிந்து கொண்டேன்.

நீங்கள் சொன்ன படங்களை படிக்கும் போதே அதன் பின்னணி இசை என் காதுக்குள் ரீங்காரமிடுகிறது .

நேற்று இரவு தொலைக்காட்சிகளில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை காட்சியை பார்த்தேன். கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனின் கரகாட்ட கோஸ்டி காரை தள்ளி கொண்டு வரும் காட்சி அது. ஆரம்பத்திலேயே இளையராஜா அது உலக மகா காமெடி காட்சி என்பதை தன இசையால் சொல்லிவிடுவார். அந்த இசையை கேட்ட வுடனே எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். என்னுடைய சிலநண்பர்கள் இந்த இசையை தங்களின் ரிங் டோன் ஆக வைத்திருப்பார்கள் . எப்போ அழைப்பு வந்தாலும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிடும்.

இசையால் அழுகை வரவைப்பதும், உருக வைப்பதும், துள்ளாட்டம் போட வைப்பதும் மட்டும் சிறந்த இசை அல்ல . ஒரு இசையை கேட்டவுடனே நமக்கு சிரிப்பு வர வைக்க முடியும் என்றல் ஆழ்ந்த கற்பனை வளமும், தேர்ந்த இசை ஞானமும் இருக்க வேண்டும். நானும் பல மொழி படங்களை பார்த்து இருக்கிறேன். எண்ணில் அடங்கா நகைச்சுவை படங்களை பார்த்து இருக்கிறேன்.  இரு விதமான பின்னணி இசைகள் தான் பெரும்பாலான படங்களில் கேட்டு இருக்கிறேன்.

ஒன்று ஸ்ப்ரிங் தாவுவது போன்ற இசை , மற்றொன்று மரக்குடுவைக்குள் கல்லை வைத்து உருட்டி விடுவது போன்ற இசை. சார்லி சாப்ளின் படங்களில் பெரும்பாலும் drums இசைதான் பின்னணி. அதன் பிறகு வந்த நகைச்சுவை படங்களில் பெரிய ரக பேண்டு ( அதை வாசிக்கும் ஆளையே மறைக்கும் அளவுக்கு இருக்குமே அதே தான் )வாத்தியங்கள் தான் இசை. அதுவும் ஒரு இசை கோர்வையில் இருக்காது. சும்மா ப்பபாம்ம் என்று தான் ஊதுவார்கள் . சமயத்தில் வயலினில் நாலு இழு இழுத்தது போல ஒரு இசை . அவ்வளவே

இதைத்தான் அனைத்து இசை அமைப்பாளர்களும் மாறி மாறி நகைச்சுவை காட்சிகளுக்கு பயன்படுத்துவார்கள். வேறு எந்த புதுமையும் இருக்காது. இதில் மாறுபட்டவர் இளையராஜா மட்டுமே. இந்த ஒரு விசயத்தில் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ரஹ்மானும் தோல்வியே தழுவி இருக்கிறார். அவரது இசையில் வந்த எந்த படங்களின் நகைச்சுவை காட்சியும் ஞாபகம் வைத்துகொள்ளும் அளவுக்கோ அல்லது சிரிப்பை வர வழைக்கும் அளவுக்கோ பின்னணி இசை இருந்த்ததில்லை என்பதே உண்மை.

குறிப்பாக Black Humor என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்களின், கிராம மக்களின்  துயரத்தையும் நகைச்சுவை ஆக்கும் அவர்களின் வாழ்க்கை பற்றிய முழு நீள நகைச்சுவை  படத்திற்கு A.R.ரஹ்மான் ஐ இசை அமைக்க சொன்னால் அவரால் புதுமையாகவும், கேட்கும்போதே சிரிப்பு வரகூடியதாகவும் இருக்கும் பின்னணி இசையை அவரால் அமைக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். அவர் மட்டும் அல்ல இந்தியாவில் வேறு எந்த இசை அமைப்பாளரை எடுத்துகொண்டாலும் இதே கதை தான். இங்கே தான் இளையராஜா ஒரு முழுமையான இசை அமைப்பாளர் என்பதை உறுதி செய்கிறார்.

7785_12319977601png

உடனே A.R.ரஹ்மான் இசை என்றால் எனக்கு ஆகாது எனவும், இளையராஜாவுக்கும் மட்டுமே ரசிகன் எனவும் என்னை நினைக்க வேண்டாம். நான் இசைக்கு தான் ரசிகன். கலைஞனை வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்தால் கலையை ரசிக்க முடியாது. A.R.ரஹ்மானும் ஒரு முழுமையான இசை அமைப்பாளராக மாற வேண்டும் என்பதே என் ஆசையும். அதற்கு இயக்குனர்கள் தான் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

எப்படி நான் நிம்மதியாக தூங்குவேன் ?

அன்பான மனைவி , அழகான குழந்தை , குறைந்த வாடகையில் அருமையான வீடு, வீட்டிற்கு அருகிலேயே கம்பெனி, அதிக பிக்கள் பிடுங்கல் இல்லாத வேலை, நல்ல சம்பளம், மலைப்பாங்கான ஊர் – இப்படி பட்ட அருமையான வாழ்கை அமைந்த நான் சந்தோசமாகதானே இருக்க வேண்டும்.

மனதில் நிம்மதி தானே எப்பவும் நிலவ வேண்டும். நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும் அல்லவா.. ? ஆனால் இல்லை. எட்டு மணி நேரம் தூங்கி வெகு நாட்கள் ஆனது போல உள்ளது. முகத்தை சவரம் பண்ணி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரசித்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எதோ ஒரு சிந்தனையில்  தான்  எப்போதும்  உணவு  உண்பதென்ற  வழக்கமாகிவிட்டது .

நான் ஏன் இப்படி ஆனேன் ?

ஈழத்தின் மீதான எனது கடைசி நம்பிக்கைகளும் ஒவ்வொன்றாக பொய்த்து போனது. தேர்தலில் தமிழின துரோகிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும். ஈழபிரச்சனையில் என்ன செய்வதென்று அறியாது திணறி இருக்கும் மக்களுக்கு தங்களது எதிர்ப்பை பதிய வைத்து அதன் மூலம்  இந்த அரசியல்வாதிகளுக்கு  தங்கள் உணர்வை  புரிய வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கிடைத்தது செமத்தியான அடி.

தேர்தல் முடிவுக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள். பதுங்கும் புலி பாய போகிறது என்று நினைத்தேன். ஆனால் சிங்கள பேரினவாத எதிரிகள்   விரித்த வலையில் சிக்கி வீழ்ந்தது . இரண்டாவது அடி

புலிகள் தலைவர் இறந்ததை இன்று வரை நம்ப வில்லை என்றாலும் , அதை ஒட்டி நடந்த இனவெறி கும்பலின்  நாடகங்களும் மக்களின் மனநிலையை வெகுவாக கொன்றும் ,குழப்பியும் வருவது மூன்றாவது அடி.

இறுதி போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் என்றும், இருபதாயிரத்தை தாண்டும் என்றும் வரும் செய்திகள் மன நிம்மதியை, மன உறுதியை , தெளிவை முற்றிலுமாக நொறுக்கியது. ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றும் , வேதனையில் விஷத்தை தாருங்கள் என்று கேட்பதாகவும் வரும் தகவல்கள் மனதை  அழத்தூண்டுகிறது .

இதையெல்லாம் கேட்டு நாம்தான் சக்தி அற்று நிற்கிறோம். தமிழக தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருகிறார்கள்? வென்றவர்கள் டெல்லியில் பதவி பேரம் நடத்துகிறார்கள். தோற்றவர்கள் துண்டை தலையில் போட்டுகொண்டு வீட்டுக்குள் ஒழிந்துகொண்டிருகிறார்கள். ஆனால் யாரும் ஈழமக்களின் இத்தகைய கடும் துயரத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

இவ்வளவு நாள் ஊழல் செய்தீர்கள் , ரவுடிசம் செய்தீர்கள் , அரசியல் கொலைகள் செய்தீர்கள், வெட்கமே இல்லாமல் பொய்களை சொன்னீர்கள் , பதவிக்கு வந்த பின் மக்களை மறந்தீர்கள், அராஜகம் செய்து தேர்தலில் வென்றீர்கள். எல்லாம் பொருத்துகொண்டோம் . சக மனிதன், சகோதரன் ஈழத்தில் வரலாறு காணாத அளவிருக்கு கொன்று குவிக்க படுகிறான். அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் உங்கள் அரசியலும் பதவியும் உங்கள் கட்சியும், குடும்பமும் தான் முக்கியம் என்று இருந்தீர்களே.. எப்படி பொறுக்க முடியும். உங்களை ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் மக்களுக்கு துரோகம் செய்த ஒவ்வொருவரையும் வரிசையில் நிற்க வைத்து செருப்பால் அடித்தால் என்ன ?

அடித்தால் மட்டும் நீங்கள் திருந்திவிடவா போகிறீர்கள் மானங்கெட்ட ஈனப்பிறவிகள்.

ஆதி இனம், ஆதி மொழி என்ற பெருமைகள் இருந்தும் என்ன பயன் ? ஈனம் இல்லையே . மானம் இல்லையே என்ன செய்ய.. ?

எப்படி எனக்கு நிம்மதி இருக்கும் ? எப்படி நான் நிம்மதியாக தூங்குவேன் ?

முடிவெடுத்துவிட்டேன் அரசியலில் இறங்குவதென்று . எத்தனை நாள் தான் சாக்கடை சாக்கடை என்று ஒதுங்கி போவது.? நான் சாமானியன் தான். அதுதான் என் பலம். சாமானியன் யோசிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று சரித்திரத்தை கேட்டால் கதை கதையாக சொல்லும் . இங்கே நான் என்பது நான் ஒருவன் மட்டும் அல்ல . என்னை போல நூறு பேர் , ஏன் ஆயிரம் பேர் கூட இருக்கலாம். நீதி நேர்மை புடலங்காய் என்று பேசபோவதில்லை. குறைந்த பட்ச மனிதநேயத்தை காப்பாற்றுவது மட்டும் தான் என் நோக்கம். பிறகு தான் மற்றவை.

அடுத்த தேர்தலில் கட்சி சாரா ( அல்லது புதியதொரு இளைய பாரதக்கட்சி ) பல புதிய இளைஞர்கள் உங்களுடன் போட்டிபோட்டால் ஆச்சர்யபடாதீர்கள். திருந்துங்கள் .

இத்தனை ஆண்டுகால அரசியல் அவலங்களுக்கு, அரசியல்வாதிகளின் கொடுமைகளுக்கு ஆப்பு அடிக்கபோவது நிச்சயம்.

காந்தி சொன்னது போல முதலில் சத்தியம் தோற்கடிக்கப்படலாம். ஆனால் அது தோல்வி அல்ல பாடம். இறுதியில் சத்தியம் வென்றே தீரும்.

« பழைய வரவுகள்