என் மகளும் தமிழும்

தமிழின் தொன்மையும், ஆழமும் பாட புத்தகங்களில் , வரலாற்று கதைகளில் , அறிஞர்களின் பேச்சினில் நிறைய படித்திருக்கிறேன். விக்கிபீடியா சொல்லும் கணக்குப்படி 2500 வருடங்களுக்கும் மேலான பழமையான மொழி என்கிறது. 4000 வருடங்கள் பழமையான மொழி என்று தமிழ் தாத்தா  உ. வே.சாமிநாத ஐயர் சொல்லியிருக்கிறார். சில வரலாற்று நூல்கள் சொல்லும் கணக்கை பார்த்தால் 6000 வருடத்தை தொடும் என்று தோன்றுகிறது.

tamil

ஆனால் நான் சொல்லும் கணக்கு கொஞ்சம் விசித்திரமானது. என் கணக்குப்படி தமிழ் 10,000 வருடங்களுக்கு மேலான  பழமையான ஆதி மொழி. உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழி என்றே சொல்வேன். மனிதன் பேச ஆரம்பித்த காலம் தொட்டு பிறந்து வளர்ந்த மொழி என்று சொல்வேன். என்ன ஆதாரம் ? நாம் தான் ஆதாரம் . நம் குழந்தை தான் ஆதாரம்.

என் மகள் மீனாட்சி இப்போது பேச முயற்சிக்கிறாள். அவள் பேசிய முதல் சொல் ம்ம்மா . பின்பு சிறிது நாள் கழித்து அம்மா.. என்று அழகாக சொல்ல ஆரம்பித்தாள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா.. என் மனைவி தன்னை மம்மி என்று தான் அழைக்க சொல்வேன் என்று  என் குழந்தையை பார்த்து மம்மி.., மம்மி சொல்லு என்பாள். என் மகளோ அம்ம்மா என்று அழுத்தி உச்சரிப்பாள். எனக்கு இது வேடிக்கையாக இருக்கும்.

பிறகு சிறிது நாள் கழித்து அப்பா என்றும் அழைக்க ஆரம்பித்தாள். ஒரு அப்பன் தன் குழந்தை தன்னை அப்பா என்றழைக்கும் முதல்  தருணத்தில் அடையும் சந்தோசத்திற்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. அந்த தருணமும் வந்தது. மீண்டும் அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் ஊடல் ஆரம்பித்தது. என் மனைவி டாடி சொல்லு என்பாள். என் மகளோ அபா என்றோ அப்பா என்றோ தான் சொல்வாள். நான் இங்கிட்டு வேலை பார்த்துகொண்டிருக்கும் போது, நீ அங்கிட்டு அப்பா சொல்லுன்னு குழந்தைகிட்ட சொல்லிகொடுத்திருக்க ? என்று என்னிடம் சண்டை பிடிப்பாள். நான் சிரித்து கொண்டே அவள் என் பிள்ளை என்பேன்.

பிறகு அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உறவுகளை குறிப்பதாக தான் இருந்தது, தாத்தா, மாமா , அத்தை , பாப்பா என்று . இத்தனைக்கும் எங்கள் உறவுகள் இருப்பதோ மதுரையிலும் ராமநாதபுரத்திலும், நாங்கள் இருப்பதோ கர்நாடகத்தில்.

இப்போது புதிதாக இரண்டு வார்த்தைகள் சொல்கிறாள். அந்தா.. , இந்தா – என்பன அவை. வெளியே போகவேண்டும் என்றாலோ , எதையாவது எடுக்க வேண்டும் என்றாலோ அந்தா.. என்று சொல்வாள். எங்களுக்கு எதைவது கொடுக்கும் போதோ , ஊட்டிவிடும் போதோ இந்தா இந்தா என்பாள்.

மற்ற மொழிகளுக்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். மற்ற மொழிகள் , பிற மொழிகளில் இருந்து சொற்களை பெறும்போது தமிழ் மட்டும் மனித வாழ்கையில் இருந்து இயல்பான ஒலியில் தருவித்து கொண்டது.

 

இன்னும் வளரும்..

படித்ததில் பிடித்தது – 1

சில மாதங்களாக நான் எதுவும் எழுதவில்லையே தவிர, நிறைய படித்தேன் , கவனித்தேன் , யோசித்தேன், தீர தாகத்துடன் படித்துக்கொண்டே இருந்தேன். என்னை அதிகம் பாதித்த , மீண்டும் மீண்டும் படிக்க தூண்டிய வலைத்தளங்களையும் வலை பூக்களையும் இங்கே பட்டியல் இட்டு இருக்கிறேன்.

மாதவராஜ் – இவரின் தளம் என்னை மிகவும் கவர்ந்த தளங்களில் முதன்மையானது. எளிமையான எழுத்து நடை , அழகியல் உணர்வு , ஆழமான கருத்துகள் , நடுநிலையான சிந்தனை, பண்பாடு மிக்க எழுத்து என்று எத்தனையோ விசயங்களை சொல்லலாம். இவரது எழுத்தில் இதுவரை தனிமனித விரோதம் , தரக்குறைவான வார்த்தை என்று எங்கு தேடினாலும் கிடைக்காது. மிக சில கட்டுரைகளில் மட்டும் எனக்கு முரண்பாடு உண்டு. இவரின் சிறுகதைகள் வெறும் கதையாக இல்லாமல், சிந்திக்க தூண்டுபவையாக இருக்கும். ஒரு வலை பூ எப்படி இருக்க வேண்டும் இதைவிட சிறந்த உதாரணம் இல்லை.

சுவாமிஜி ஓம்கார் – எத்தனையோ ஆன்மிக புத்தகங்கள், கட்டுரைகள், கதைகள் படித்திருக்கிறேன். ஆனால் எதிலும் உணராத மன நெருக்கம் இவரின் இந்த தளத்தில் உணர்ந்திருக்கிறேன். எனது மனதில் நிலைத்திருந்த பல புதிரான கேள்விகளுக்கு இந்த தளத்தில் தெரிந்து கொண்டேன். கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கடவுள் உண்ணுவாரா ? – இந்த கேள்வி சிறுபிள்ளைதனமாக இருக்கும். தெளிவான பதில் இருக்காது நம்மிடம். இவரது மற்றொரு தளமான குரு கதைகள் தளத்தில் எனக்கு விடை கிடைத்தது. இந்த துணை தளத்தில் ஏராளமான சாவிகள் உண்டு. இவற்றை கொண்டு நம் மனங்களின் திறக்கப்படாத பல கதவுகள் திறக்கலாம் .

Webdunia Tamil – பல செய்தி தளங்களுக்கு சென்று சோர்வு கொண்ட போது yahoo Tamil மூலமாக இந்த தளத்திற்கு வந்தேன். சரியான கோணத்தில் தெளிவான செய்திகளை தாங்கி இருந்தது. இந்த தளம் வார இதழாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும். இதன் கட்டுரை பகுதியில் உள்ள அனைத்து கட்டுரைகளும் சிறப்பாக இருந்தது. கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் தான் இதன் குறை. வேறு வழி இல்லை. விளம்பரங்கள் தானே அவர்களுக்கு பெட்ரோல்.

கட்டபொம்மன் – இவர் ஒரு போலீஸ் அதிகாரி. இவர் பணியில் இவர் அடைந்த அனுபவங்களை பதிவு செய்வார். ஒவ்வொரு பதிவும் பொதுமக்களுக்கு ஒரு பாடம் என்று சொன்னால் அது மிகை இல்லை. நகைப்பூட்டும் எழுத்து நடை. குறைவான பதிவுகள் தான் ஒரே குறை. இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும். காவல் துறையிலும் நல்ல இதயங்கள் உண்டு. அவர்களின் கட்டாயங்கள் , நெருக்கடிகள் பொது மக்கள் அறியாதவை. அவர் தான் அதை அறிய படுத்த வேண்டும்.

டிஸ்கி : நான் இதுவரைக்கும் இவர்களின் 90% பதிவுகளை படித்திருந்தாலும், தினமும் ஒரு முறையாவது இவர்களின் தளங்களுக்கு சென்றாலும் இது வரை ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை.

நான் ஏன் பதிவு போடவில்லை ?

ரெம்ப நாள் கழித்து ஒரு பதிவு போடுகிறேன். நான் பதிவு போடவில்லை என்றால்  ஏன் , எதற்கு போடவில்லை என்று யாரும் கேட்கபோவதில்லை. வாசகர் வட்டம் , மாவட்டம் எல்லாம் நமக்கு இல்லை. என் மாப்பிள்ளை வைத்தி மட்டும் அவ்வப்போது தேடி படிப்பான். மற்றபடி குறிப்பிடத்தக்க வலை உலக  நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் பதிவு போட முடியவில்லையே என்ற பதட்டம் என்றும் இருந்த்ததில்லை.

3595662973_335e0e5641_o

தொடர்ச்சியாக பதிவு போட்டுக்கொண்டிருந்த நான் ஒரு பெரும் இடைவெளி விட்டதிற்கு காரணங்கள் சில.

௧) ஈழப்பிரச்சனையில் இந்த நூற்றாண்டின் பெரும் இனபடுகொலை நடந்தும் , அது குறித்த கவலையோ , பதட்டமோ, கோபமோ எதுவும் இல்லாமல், உணர்ச்சிகள் அற்று போன ஒரு சமுதாயத்திடம் என்ன பேசுவது

௨) இது நாள் வரை என் உடம்போடும், குருதியோடும் ஊறிப்போன சில நம்பிக்கைகள் எல்லாம் பொய் எனத் தெரிந்த்தத்தில் உண்டான அதிர்ச்சி இன்னும் போக வில்லை.

௩) குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட தொலைந்து போன அரசியல் தலைவர்களையும், மக்களையும் கொண்ட ஒரு சமுகத்தில் வாழ்கிறோம் என்ற பேரதிர்ச்சி.

௪) மனம் ஆறிபோகவும், பக்குவபடவும் சிறிது காலம் தேவைப்பட்டது.

இந்த இடைவெளியில் என் தோழி துர்காவுக்கு ஒரு கடிதம் அல்லது ஈமெயில் கூட அனுப்பவில்லை. அவள் அனுப்பிய ஒரு ஈமெயில் க்கு ஒரு வரி பதில் கூட அனுப்பவில்லை. இத்தனைக்கும் அவளுக்கும் எனக்குமான நட்பு கடிதத்திலும், ஈமெயில் இலும் தான் பத்தாண்டுகாலதிற்கும் மேலாக தொடர்கிறது.

ஈழத்தை பொறுத்த வரையில் துயரம் துயரமாகவே கரைந்து போனதே ஒழிய நிம்மதியாக நம்பிக்கையாக மாறவே இல்லை.

என்றாவது ஒரு நாள் இதற்கு காரணமானவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த பதில் அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலம் அவர்களை ரத்த வெறி பிடித்த மிருகங்கள் என்று தான் சொல்லும்.

டார்க் லாண்ட் போகவேண்டும் டாடி

(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )

8:30AM, April 11,2030 .

டார்க் லாண்ட் போகவேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. எங்கள் என்பதன் அர்த்தம் நானும் என் மகளும் மட்டுமே . என் மனைவி இந்த மாதிரியான பயணம் மேற்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள் அல்ல என்பதால் அவள் இதில் சேர்த்தி இல்லை. இப்பவும் கூட நாங்கள் நியுசிலாந்து போறோம் என்று தான் அவளிடம் சொல்லி இருக்கிறோம். இல்லையென்றால் பயத்திலேயே பாதி உசிரை விட்டு விடுவாள்.

எங்கள் பயணத்திட்டமே ஒரு சுவாரஸ்யமான கதை. மீனு குட்டிக்கு பன்னிரண்டு வயது இருக்கும் போது Gmap இல் பயணம் செய்துகொண்டிருந்த போது சேது சமுத்திரத்தின் Adam பாலத்தை கண்டு என்னிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அவள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை மட்டும் சொல்லாமல் அதனுடன் தொடர்புடைய எல்லா விசயங்களையும் சொல்ல ஆரம்பித்து விடுவேன். அன்றும் அப்படித்தான் ராமாயணத்தில் ஆரம்பித்து ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருந்தேன்.

கொஞ்சம் பொறுங்கள் . Air Taxi வரும் சத்தம் கேட்கிறது. எங்கள் வீட்டிற்கு Air Taxi வரும் அளவுக்கு இடம் கிடையாது என்பதால் பக்கத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் இறங்கும் என்று காலையிலேயே VMS ( Video Message Service ) வந்துவிட்டது. Air Taxi  இப்போது தான் இந்தியாவுக்கு அறிமுகமாகி இருக்கிறது என்பதால் யாழ் Airways முதல் வகுப்பு டிக்கெட் வாங்கும்போது இலவச இணைப்பாக இந்த சேவையை கொடுத்திருக்கிறார்கள். Air Taxi இல் ஏறினால் பத்துநிமிடத்தில் விமான நிலையம் சென்று விடலாம் . அங்கிருந்து யாழி என்கிற ஈழ நாட்டின் விமானத்தை பிடித்து விடலாம். அங்கிருந்து 30 நிமிட பயணத்தில் யாழ் பாண விமான நிலையத்தை அடைந்து விடலாம். மீண்டும் 10 நிமிட  Air Taxi பயணம். டார்க் லாண்ட் என்று சொல்லப்படும் முள்ளிவாய்கால் வந்து விடும். எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது.

அவ்வாறு அன்று ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருக்கும் போது முள்ளி வாய் கால் மாபெரும் மனித படுகொலையையும் அவள் மனம் துயருராத வகையில் மறைத்தும் மறைகமலும் சொல்லிவந்தேன். அன்று ஆரம்பித்தாள் கச்சேரியை டார்க் லாண்ட் போகவேண்டும் என்று. கடந்த ஒன்பது வருடங்களாக இந்த அந்தா என்று இழுத்து கொண்டிருந்தாலும் விடாமல் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். ” The dark land” என்று சமிபத்தில் வெளிவந்த British திரைப்படம் 11 Oscar Awards வென்று உலகெங்கும் சக்கை போடு போடுகிறது.

எனக்கும் உள்ளுர ஆசை இருந்தாலும் , அந்த இடத்தை நேரில் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் ஆண்டுகளை கடத்தி வந்தேன். அதற்குள் ஆண்டுகள் பலவாகி ” நீங்கள் கூட்டிசெல்கிறீர்களா  இல்லை நானே செல்லட்டுமா” என்ற அளவுக்கு வரவும் வேறுவழியின்றி கூட்டி செல்ல முடிவெடுத்தேன்.

இப்போது கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கிறோம் என்ற அறிவிப்பு வந்தது. கூடவே எங்கள் இருக்கையின் முன் உள்ள பிளாஸ்மா டிஸ்ப்ளே இல் சேது சமுத்திரத்தின் கடலையும் அதில் தெரியும் ராமர் பாலமும் தெரிகின்றது. மீனு குட்டி டிஸ்ப்ளே இல் ஜூம் பண்ணி பார்த்தாள். மிதக்கும் பாறைகளை பற்றிய இணைய தொடர்பை தட்டினாள். அறிவியல் விளக்கங்களும் ஆன்மிக விளக்கங்களும் அடுத்தடுத்து வந்தன. அதை முழுதாக  வாசித்துகொண்டிருக்கும் போதே ” யாழ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். உங்கள் இருக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அறிவிக்கவும். நாங்கள் இருக்கையில் சாய்ந்து உட்கார அதுவே எங்கள் கைகளையும் கால்களையும் எலாஸ்டிக் வளையங்களால் பிணைத்தது. தரை இறங்கியதும் தானாக விடுவித்தும் விட்டது. இதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. மீனு குட்டி எரிச்சல் பட்டுகொண்டாள்.

“எவன் இதை கண்டுபிடிச்சான் அவனை இந்த சீட்டில் உட்கார வச்சு கடல்ல தள்ளனும்” என்றாள். அவளுக்கு இதுமாதிரி எல்லாம் பாதுகாப்புக்கு கூட  பிணைக்கப்பட்டு இருந்ததில்லை. காரில் கூட சீட் பெல்ட்டை அறுத்து எறிந்தவள். பிடிவாதம் அவள் உடன் பிறப்பாக இருந்தது.

யாழ் விமான நிலையத்தில் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளிவந்து Air Taxi ஐ பிடித்தோம். இதை நான் ஆச்சர்யமாக மீனுவிடம் சொன்ன போது அவள் சிரித்தாள். “டாடி இதுவரை உங்களை 18 தடவை சோதித்து விட்டார்கள் உங்களுக்கே தெரியாமல். பின்ன எதுக்கு இவ்ளோ  பெரிய  Fiber Passing Tube இல் வந்தோம் அழகுக்கு என்றா நினைத்தீர்கள்.?” என்றாள் . சிரித்துக்கொண்டேன்

Air Taxi நாங்கள் நினைத்ததை விட வேகமாக பறந்தது. ” தியாக  பூமி உங்களை அன்புடன் வரவேற்கிறது ” என்ற அறிவிப்பு பலூன் எங்களை கடந்து சென்றது. இறங்கினோம். மணியை பார்த்தேன் 10:30AM, April 11,2030 . இன்று மாலையே திரும்ப இருப்பதால் எந்த சுமையும் எடுத்துவரவில்லை. 64X Digicam மட்டுமே மீனுவின் கையில் இருந்தது. அது கூட கொண்டுவர எனக்கு பிடிக்கவில்லை. மீனுவின் விருப்பமே அது. மீனு Digicam ஐ ஆன் செய்த போது சொன்னேன் ” மீனு , இது தியாக பூமி . உணர்வு பூர்வமாக பார்க்க வேண்டிய இடம் . காமரா கண்ணில் பார்த்தால் உணர்வு மறந்து போகும். அதை தான் விரும்புகிறாயா ” என்றேன்.

ஒரு வினாடி யோசித்தவளாய் “Sorry daddy ” என்று சொல்லி கேமராவை தன் பாக்கெட்டில் வைத்துகொண்டாள். அது தான் அந்த இடத்தில் அவள் பேசியது. அதன் பிறகு பேசவே இல்லை. நான் பேச வந்த போது கூட பேச வேண்டாம் என்று சைகையில் சொல்லி தடுத்து விட்டாள். அருங்காட்சியகம் , புகைபட காட்சியகம், அருங்காட்சியக  திரை அரங்கம் என்று எங்கு சென்ற போதும் அவள் வாயே திறக்க வில்லை. ஆங்கங்கே  காணப்படும் செப்பு சிலைகள் பார்வையாளர்களை மனத்துயரில் ஆழ்த்தும் அழகுடன் இருந்தன. ஒரு சிலையின் முன் அவள் வெகு நேரம் நின்றாள். குண்டடிபட்டு இறந்த தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் அருந்துவது போல அமைக்கப்பட்ட சிலை, இல்லையில்லை துயரம்.

அங்கிருந்த சிற்றுண்டி இல் உணவருந்தும் போது , அவளிடம் கேட்டேன் ஏன் அந்த சிலை முன் அவ்வளவு நேரம் நின்றாய் ” என்று .
” அப்பா.. ( பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவள் என்னை அப்பா என்று அழைக்கிறாள் . இல்லை என்றால் எப்பவும் டாடி தான் ). என்னை எதுவும் கேட்காதீர்கள் அப்புறம் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது போய் விடும் ” என்றாள். அதன் பிறகு நான் எதுவும் கேட்கவில்லை.

அதன் பிறகு நாங்கள் சென்ற இடம் எங்கள் இதயத்தை ஒரு கணம் நிறுத்துவதாக இருந்தது. 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த 22,000 சமாதிகள். ஒவ்வொரு சமாதிக்கும் ஒரு கதை இருந்திருக்கும். ஆனால் எல்லோர் கதைகளின் முடிவு மட்டும் ஒன்றாக இருந்தது தான் பெரும் துயரம்.

பிறகு இன்னும் சில இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. துப்பாக்கி குண்டுகளால் சல்லடை ஆக்கப்பட்ட மருத்துவமனை, ரத்தத்தில் தோய்ந்த்த பதுங்கு குழிகள் என்று சில நினைவிடங்களுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் மனதின் சுமையை கூட்டிக்கொண்டே தான் போக வழி இருகிறதே ஒழிய , அங்கே குறைக்க வழி இல்லை. அதனால் திரும்புவது என்று முடிவெடுத்து அவளிடம் கேட்டேன். சரி என்று மெளனமாக தலை அசைத்தாள்.

திரும்பும் வழி எங்கும் அவள் ஒரு வார்த்தை பேச வில்லை. ஏன் என் முகத்தை கூட பார்க்க வில்லை. யாழ் விமானம் மண்ணை விட்டு விண்ணுக்கு கிளம்பியது. சீட் பெல்டின் இறுக்கம் தளர்ந்தது என்றாலும் மனதின் இறுக்கம் அப்படியே தான் இருந்தது. ஒரு கணம் மீனு குட்டி என்னை பார்த்தாள். ஏதோ கேட்க வருகிறாள்.

“இங்கே போர் நடந்தபோது உங்களுக்கு என்ன வயசு ? “

“முப்பது வயது இருக்கும் . நீ அப்போ எட்டு மாத குழந்தை ” என்று பழைய புராணத்தை எடுத்து விட எத்தனித்த போது

“போதும் உங்கள் கதை. இங்கே போர் நடக்கும் போது, இதுமாதிரி ஒரு ஒரு.. சொல்ல முடியாத அளவு பெரும் கொடூரம் நடக்கும் போது நீங்கள் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் “

“என்னால் என்ன முடியும். blog இல் என் மனத்துயரை கொட்டி ஒரு பதிவு போட்டேன். “

“உங்களை நினைத்தால் எனக்கு ரெம்ப வெட்கமா இருக்கு டாடி” என்று சொல்லிவிட்டு ஜன்னலின் வழியே ஈழத்தை மறையும் வரைக்கும் பார்க்க தொடங்கினாள்

அன்று காத்த அதே மௌனத்தை  இன்றும் காக்கிறேன் ஒரு மரம் போல .

A.R.ரஹ்மானும் , நகைச்சுவை காட்சியும்

இளையராஜாவின் சிறந்த பின்னணி இசை பற்றிய முந்தைய பதிவிற்கு பின்னோட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் சொன்ன அனைத்து படங்களையும் சேர்த்துவிட்டேன். விடுபட்ட படங்களை தொடர்ந்து அனுப்புங்கள் . இளையராஜாவின் சிறந்த பின்னணி இசையை வெறும் பத்து எண்ணிக்கைக்குள் அடக்க நினைத்தது மாபெரும் தவறு என்று புரிந்து கொண்டேன்.

நீங்கள் சொன்ன படங்களை படிக்கும் போதே அதன் பின்னணி இசை என் காதுக்குள் ரீங்காரமிடுகிறது .

நேற்று இரவு தொலைக்காட்சிகளில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நகைச்சுவை காட்சியை பார்த்தேன். கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனின் கரகாட்ட கோஸ்டி காரை தள்ளி கொண்டு வரும் காட்சி அது. ஆரம்பத்திலேயே இளையராஜா அது உலக மகா காமெடி காட்சி என்பதை தன இசையால் சொல்லிவிடுவார். அந்த இசையை கேட்ட வுடனே எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். என்னுடைய சிலநண்பர்கள் இந்த இசையை தங்களின் ரிங் டோன் ஆக வைத்திருப்பார்கள் . எப்போ அழைப்பு வந்தாலும் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிடும்.

இசையால் அழுகை வரவைப்பதும், உருக வைப்பதும், துள்ளாட்டம் போட வைப்பதும் மட்டும் சிறந்த இசை அல்ல . ஒரு இசையை கேட்டவுடனே நமக்கு சிரிப்பு வர வைக்க முடியும் என்றல் ஆழ்ந்த கற்பனை வளமும், தேர்ந்த இசை ஞானமும் இருக்க வேண்டும். நானும் பல மொழி படங்களை பார்த்து இருக்கிறேன். எண்ணில் அடங்கா நகைச்சுவை படங்களை பார்த்து இருக்கிறேன்.  இரு விதமான பின்னணி இசைகள் தான் பெரும்பாலான படங்களில் கேட்டு இருக்கிறேன்.

ஒன்று ஸ்ப்ரிங் தாவுவது போன்ற இசை , மற்றொன்று மரக்குடுவைக்குள் கல்லை வைத்து உருட்டி விடுவது போன்ற இசை. சார்லி சாப்ளின் படங்களில் பெரும்பாலும் drums இசைதான் பின்னணி. அதன் பிறகு வந்த நகைச்சுவை படங்களில் பெரிய ரக பேண்டு ( அதை வாசிக்கும் ஆளையே மறைக்கும் அளவுக்கு இருக்குமே அதே தான் )வாத்தியங்கள் தான் இசை. அதுவும் ஒரு இசை கோர்வையில் இருக்காது. சும்மா ப்பபாம்ம் என்று தான் ஊதுவார்கள் . சமயத்தில் வயலினில் நாலு இழு இழுத்தது போல ஒரு இசை . அவ்வளவே

இதைத்தான் அனைத்து இசை அமைப்பாளர்களும் மாறி மாறி நகைச்சுவை காட்சிகளுக்கு பயன்படுத்துவார்கள். வேறு எந்த புதுமையும் இருக்காது. இதில் மாறுபட்டவர் இளையராஜா மட்டுமே. இந்த ஒரு விசயத்தில் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ரஹ்மானும் தோல்வியே தழுவி இருக்கிறார். அவரது இசையில் வந்த எந்த படங்களின் நகைச்சுவை காட்சியும் ஞாபகம் வைத்துகொள்ளும் அளவுக்கோ அல்லது சிரிப்பை வர வழைக்கும் அளவுக்கோ பின்னணி இசை இருந்த்ததில்லை என்பதே உண்மை.

குறிப்பாக Black Humor என்று சொல்லப்படும் அடித்தட்டு மக்களின், கிராம மக்களின்  துயரத்தையும் நகைச்சுவை ஆக்கும் அவர்களின் வாழ்க்கை பற்றிய முழு நீள நகைச்சுவை  படத்திற்கு A.R.ரஹ்மான் ஐ இசை அமைக்க சொன்னால் அவரால் புதுமையாகவும், கேட்கும்போதே சிரிப்பு வரகூடியதாகவும் இருக்கும் பின்னணி இசையை அவரால் அமைக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். அவர் மட்டும் அல்ல இந்தியாவில் வேறு எந்த இசை அமைப்பாளரை எடுத்துகொண்டாலும் இதே கதை தான். இங்கே தான் இளையராஜா ஒரு முழுமையான இசை அமைப்பாளர் என்பதை உறுதி செய்கிறார்.

7785_12319977601png

உடனே A.R.ரஹ்மான் இசை என்றால் எனக்கு ஆகாது எனவும், இளையராஜாவுக்கும் மட்டுமே ரசிகன் எனவும் என்னை நினைக்க வேண்டாம். நான் இசைக்கு தான் ரசிகன். கலைஞனை வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்தால் கலையை ரசிக்க முடியாது. A.R.ரஹ்மானும் ஒரு முழுமையான இசை அமைப்பாளராக மாற வேண்டும் என்பதே என் ஆசையும். அதற்கு இயக்குனர்கள் தான் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

எப்படி நான் நிம்மதியாக தூங்குவேன் ?

அன்பான மனைவி , அழகான குழந்தை , குறைந்த வாடகையில் அருமையான வீடு, வீட்டிற்கு அருகிலேயே கம்பெனி, அதிக பிக்கள் பிடுங்கல் இல்லாத வேலை, நல்ல சம்பளம், மலைப்பாங்கான ஊர் – இப்படி பட்ட அருமையான வாழ்கை அமைந்த நான் சந்தோசமாகதானே இருக்க வேண்டும்.

மனதில் நிம்மதி தானே எப்பவும் நிலவ வேண்டும். நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும் அல்லவா.. ? ஆனால் இல்லை. எட்டு மணி நேரம் தூங்கி வெகு நாட்கள் ஆனது போல உள்ளது. முகத்தை சவரம் பண்ணி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரசித்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எதோ ஒரு சிந்தனையில்  தான்  எப்போதும்  உணவு  உண்பதென்ற  வழக்கமாகிவிட்டது .

நான் ஏன் இப்படி ஆனேன் ?

ஈழத்தின் மீதான எனது கடைசி நம்பிக்கைகளும் ஒவ்வொன்றாக பொய்த்து போனது. தேர்தலில் தமிழின துரோகிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும். ஈழபிரச்சனையில் என்ன செய்வதென்று அறியாது திணறி இருக்கும் மக்களுக்கு தங்களது எதிர்ப்பை பதிய வைத்து அதன் மூலம்  இந்த அரசியல்வாதிகளுக்கு  தங்கள் உணர்வை  புரிய வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கிடைத்தது செமத்தியான அடி.

தேர்தல் முடிவுக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள். பதுங்கும் புலி பாய போகிறது என்று நினைத்தேன். ஆனால் சிங்கள பேரினவாத எதிரிகள்   விரித்த வலையில் சிக்கி வீழ்ந்தது . இரண்டாவது அடி

புலிகள் தலைவர் இறந்ததை இன்று வரை நம்ப வில்லை என்றாலும் , அதை ஒட்டி நடந்த இனவெறி கும்பலின்  நாடகங்களும் மக்களின் மனநிலையை வெகுவாக கொன்றும் ,குழப்பியும் வருவது மூன்றாவது அடி.

இறுதி போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் என்றும், இருபதாயிரத்தை தாண்டும் என்றும் வரும் செய்திகள் மன நிம்மதியை, மன உறுதியை , தெளிவை முற்றிலுமாக நொறுக்கியது. ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றும் , வேதனையில் விஷத்தை தாருங்கள் என்று கேட்பதாகவும் வரும் தகவல்கள் மனதை  அழத்தூண்டுகிறது .

இதையெல்லாம் கேட்டு நாம்தான் சக்தி அற்று நிற்கிறோம். தமிழக தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருகிறார்கள்? வென்றவர்கள் டெல்லியில் பதவி பேரம் நடத்துகிறார்கள். தோற்றவர்கள் துண்டை தலையில் போட்டுகொண்டு வீட்டுக்குள் ஒழிந்துகொண்டிருகிறார்கள். ஆனால் யாரும் ஈழமக்களின் இத்தகைய கடும் துயரத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

இவ்வளவு நாள் ஊழல் செய்தீர்கள் , ரவுடிசம் செய்தீர்கள் , அரசியல் கொலைகள் செய்தீர்கள், வெட்கமே இல்லாமல் பொய்களை சொன்னீர்கள் , பதவிக்கு வந்த பின் மக்களை மறந்தீர்கள், அராஜகம் செய்து தேர்தலில் வென்றீர்கள். எல்லாம் பொருத்துகொண்டோம் . சக மனிதன், சகோதரன் ஈழத்தில் வரலாறு காணாத அளவிருக்கு கொன்று குவிக்க படுகிறான். அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் உங்கள் அரசியலும் பதவியும் உங்கள் கட்சியும், குடும்பமும் தான் முக்கியம் என்று இருந்தீர்களே.. எப்படி பொறுக்க முடியும். உங்களை ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் மக்களுக்கு துரோகம் செய்த ஒவ்வொருவரையும் வரிசையில் நிற்க வைத்து செருப்பால் அடித்தால் என்ன ?

அடித்தால் மட்டும் நீங்கள் திருந்திவிடவா போகிறீர்கள் மானங்கெட்ட ஈனப்பிறவிகள்.

ஆதி இனம், ஆதி மொழி என்ற பெருமைகள் இருந்தும் என்ன பயன் ? ஈனம் இல்லையே . மானம் இல்லையே என்ன செய்ய.. ?

எப்படி எனக்கு நிம்மதி இருக்கும் ? எப்படி நான் நிம்மதியாக தூங்குவேன் ?

முடிவெடுத்துவிட்டேன் அரசியலில் இறங்குவதென்று . எத்தனை நாள் தான் சாக்கடை சாக்கடை என்று ஒதுங்கி போவது.? நான் சாமானியன் தான். அதுதான் என் பலம். சாமானியன் யோசிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று சரித்திரத்தை கேட்டால் கதை கதையாக சொல்லும் . இங்கே நான் என்பது நான் ஒருவன் மட்டும் அல்ல . என்னை போல நூறு பேர் , ஏன் ஆயிரம் பேர் கூட இருக்கலாம். நீதி நேர்மை புடலங்காய் என்று பேசபோவதில்லை. குறைந்த பட்ச மனிதநேயத்தை காப்பாற்றுவது மட்டும் தான் என் நோக்கம். பிறகு தான் மற்றவை.

அடுத்த தேர்தலில் கட்சி சாரா ( அல்லது புதியதொரு இளைய பாரதக்கட்சி ) பல புதிய இளைஞர்கள் உங்களுடன் போட்டிபோட்டால் ஆச்சர்யபடாதீர்கள். திருந்துங்கள் .

இத்தனை ஆண்டுகால அரசியல் அவலங்களுக்கு, அரசியல்வாதிகளின் கொடுமைகளுக்கு ஆப்பு அடிக்கபோவது நிச்சயம்.

காந்தி சொன்னது போல முதலில் சத்தியம் தோற்கடிக்கப்படலாம். ஆனால் அது தோல்வி அல்ல பாடம். இறுதியில் சத்தியம் வென்றே தீரும்.

இளையராஜாவின் சிறந்த 10 பின்னணி இசை

இன்று காலையில் எனது கணினியில் வேறொரு file ஐ தேடும் போது இளையராஜாவின் புன்னகை மன்னன் பின்னணி இசையை கேட்க நேர்ந்தது . தேட வந்ததை மறந்து விட்டு இதை கேட்டு கொண்டிருந்தேன். இந்த நிமிடம் வரை எனது மனதில் அந்த இசை தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ராஜாவின் Other Stunning Performance என்னென்ன படங்கள் என்று யோசித்து கொண்டே வந்தேன். இங்கே எனக்கு பிடித்த பின்னணி இசையை பட்டியலிட்டு இருக்கிறேன். இது அகர வரிசை அல்ல. எனக்கு மிகவும் பிடித்தவை அவ்வளவே .
ilayaraja

1. புன்னகை மன்னன்
2. சிகப்பு ரோஜாக்கள்
3. மூன்றாம் பிறை
4. தேவர் மகன்
5. புலன் விசாரணை
6. நாயகன்
7.கடலோர  கவிதைகள்
8.நூறாவது  நாள்
9.மௌன  ராகம்
10.இதயம்

விடுபட்ட திரை இசை படங்கள் , வாசகர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது . அதை அவ்வப்போது இதில் சேர்த்து கொண்டே வருகிறேன்.

11.அபூர்வ  சகோதரர்கள்
12.இதயத்தை  திருடாதே
13.புது  புது  அர்த்தங்கள்
14.தளபதி
15.
அக்னி நட்சத்திரம்
16.மகாநதி
17.சிறைச்சாலை
18.சேது
19.முதல் மரியாதை
20.வெற்றிவிழா
21.நாடோடி தென்றல்

நான் பட்டியலிட்ட படங்களில் பின்னணி இசை இல்லாமல் படங்களை பார்க்க முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு பின்னணி இசை பெரும் பங்கு வகித்த படங்கள் இவை.

என் இனிய உலக பட ரசிகர்களே , தயவு செய்து என்னுடன் இந்த விசயத்தில் போட்டி போடாதிர்கள் . ஆ ஊ னா இந்த உலக படத்தில் எப்படி இசை அமைத்திருப்பார்கள் தெரியுமா என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .

மம்மி படம் வந்த புதிதில் பிரமிட் ஐ பற்றி பக்கம் பக்கமாக பேசினார் என் நண்பர் ஒருவர் . அதன் உயரம் , அகலம், தொன்மை , வரலாறு என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார் ?
மீனாட்சி அம்மன் கோபுரத்தின் உயரம் என்ன ? எத்தனை பெரிய கோபுரம் இருக்கு என்று கேட்டேன் .
அது அது.. என்று இழுத்துகொண்டிருந்தார்
சொந்த ஊரில் இருக்கிற ஒரு பழமையான கோவில் ஐ பற்றி தெரியல ஆனால் பிரமிட்-ஐ பற்றி கதை அளந்துக்கிட்டு இருக்கீங்க. 20000 Km தாண்டி வந்து இந்த கோவில் ஐ  பற்றி கேள்வி பட்டு , பார்த்து விட்டு செல்கிறான். உள்ளூர் காரர் உங்களுக்கு தெரியல  என்றேன்.

சரி விடுங்க அதெல்லாம் நமக்கு எதற்கு ?

Technology க்கென்று தனி வலை பூ

தமிழில் தொழில் நுட்பத்திற்கு என்று உள்ள வலை பூக்கள் மிகவும் குறைவு . இருந்த சில வலைப்பூக்களும் ரெம்பவும் technical ஆக பேசுவதால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இல்லை என்று சொல்லலாம்.

இந்த தளத்தில் நான் வெளியிட்ட அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் அதிக எண்ணிகையில் பலரை கவர்ந்ததை கண்டேன். சரி இதற்கென்றே தனி வலை பூ ஆரம்பித்தால் என்ன என்று பல நாட்களாக யோசித்ததுண்டு . அதை நேற்று செயல்படுத்தினேன்.
technology_hero20071016
இதெற்கென்று சில கொள்கைகளை பின்பற்றுவது என்று முடிவு செய்திருக்கிறேன்

1  தினமும்  ஒரு பதிவு இடவேண்டும்
2 மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், விற்பனை பிரதிநிதிகள், மற்றும் அணைத்து கம்ப்யூட்டர் பயனாளர்களுக்கும் உபயோகம் உள்ள தளமாக இருக்க வேண்டும்.
3. எளிமையான நடையில் புரியும் வகையில் இருக்க வேண்டும் .

அவ்வளவே . இனி இந்த தளத்தில் பொதுவான விசயங்களை மட்டும் காணலாம்.

இந்த தளத்திற்கு நீங்கள் கொடுத்த அதரவை அதற்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இதோ அந்த தளம் http://meenachiyar.blogspot.com/

முதல் பதிவாக இணையத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல் செயல் படும் ஒரு இணையதளம் குறித்து எழுதி இருக்கிறேன். உண்மையில் இது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உபயோகமுள்ள இணையதளம். உங்களை அசர வைக்கும் இணைத்தளம்.

கந்தன் கொண்டுவரும் ஈழபோருக்கு மருந்து

நம்மில் பலருக்கு கந்த சஸ்டி கவசம் மிக பரிட்சயம் . தமிழ் கடவுள் முருகன் ” குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்று ஒரு சொலவடை உண்டு. இங்கே குன்று என்பது தமிழர்கள் இருக்கும் இடங்களாக பொருள் கொள்ளலாம். கண்டி கதிர்காம கந்தனாகட்டும் , மலேசியா பத்து மலை முருகனாகட்டும், இன்னும் உலகெங்கும் உள்ள முருகன் தளங்கலாகட்டும் , எல்லாம் இதை தான் சொல்கிறது.

ஊரை காலி பண்ணி வேறொரு ஊருக்கு செல்வதானாலும் , நம் குல தெய்வத்தின் பிடிமண்ணை ஒரு துணியில் முடிந்து வைத்துக்கொண்டு , தெய்வத்தின் மீதான நம்பிக்கையை மனதில் சுமந்து கொண்டு செல்வது தமிழர்களின் வழக்கம். இப்படிதான் நம்முடன் குமரனும் உலகெங்கும் பயணம் செய்கிறான். முருகன் கடவுள் மட்டும் அல்ல, அவன் தமிழின் அடையாளம் . பில்லா படத்தில் ஒரு பாட்டில் ” ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான், மீதி தமிழன் அடிமைகள் ( பக்தர்கள்) ஆனான்” என்று.  உண்மை தான்.

அப்படிப்பட்ட முருகனின் துதி பாடும் கந்த சஸ்டி கவசத்தில் வரும் ஒரு வரி  இந்த தருணத்தில் ஞாபகத்திற்கு வருகிறது

” கொள்ளிவாய் பேய்களும் , குரலை பேய்களும் ,
பெண்களை தொடரும் பிரம்மா ராட்சசர்களும் ,
அடியனை கண்டால் அலறி கலங்கிட ,
வாய் விட்டலறி மதிகெட்டோட”
என்று.

சிறுவயதில் என் தாத்தா இந்த பாடலை படிக்கும் பொது நான் யோசிப்பேன் “யார் அந்த கொள்ளிவாய் பேய்கள், குரலை பேய்கள் ? அவைகள் எப்படி இருக்கும் என்று .

ஈழபோரையும் , இலங்கையின் பேரின வாத அரசையும் , அதன் அடக்குமுறையையும் பார்க்கும் போது இன்று அதன் அர்த்தம் புரிகிறது.

அடுத்து செய்யவேண்டியதையும் இந்த வரிகள் சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது. அந்த பேய்கள் வாய் விட்டு அலறி , மதி கெட்டு ஓட, தமிழனை கண்டால் அலறி கலங்கிட செய்யத்தான் அன்று அப்படி பாடி வைத்தார்களோ என்று தோணுகிறது.

ஆச்சர்யம் மேலிட மேலும் சில வரிகளை நினைவுக்கு கொண்டுவருகிறேன். பக்தியின் வாயிலாக நமக்கு எப்படி வீரத்தை ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் என்று.

MuruganPalani
” காக்க காக்க கனகவேல் காக்க ,
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடி பட
பில்லி சூனியம் பெரும் பகை அகல
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
என்றனை( தமிழனை )  கண்டால் இடி விழுந்து ஓடிட “

இந்த நேரத்தில் மிக சரியாக பொருந்தும் வரிகள் , மேலும் தேவையான வரிகளாகவும் படுகிறது. அதனால் தான் சொல்கிறேன் முருகன் நம் கடவுள் மட்டும் அல்ல, அவன் அரு மருந்து.

பொய்க்கும் புரட்டுக்கும் நடுவில் ஈழம் சாத்தியமா ?

அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும் கலந்த நாடகம் என்றாகி விட்டது. லோக்கல் அரசியல் முதல் உலக அரசியல் வரை எல்லாம் போலித்தனமும் பொய்யும் தான்.

நான் காலத்தின் கடந்த பக்கங்களை சொல்லும் வரலாறுகளை தேடி தேடி படிப்பவன். என் வரலாற்று தேடலின் பின்னோக்கிய பயணம் உலகின் முதல் உயிர் பிறந்த கதை போனதுண்டு. இன்றும் உலக வரலாற்றை தேடி தேடி படிக்கிறேன். என் அறிவிற்கு எட்டிய வரை எந்த காலத்திலும் இல்லாத அளவு குரோதமும், வன்முறையும் அதை விட கொடுமையான அசகாய அரசியல் பொய்யும் புரட்டும் கடந்த 60 ஆண்டுகளில் உலகமெங்கும் நீக்கமற வியாபித்து இருக்கிறது.

கடந்த காலத்திற்கும் , இந்த காலத்திற்கும் உள்ள அரசியல் வித்தியாசம் என்னவென்றால் உண்மை எது , பொய் எது தெரியாத அளவிற்கு பொய்யும் புரட்டும் கலந்து பெருவாரியான மக்களை ஆள்பவர்கள் ஏமாற்றுவதே. கடந்த காலத்தில் வன்முறை உண்டு, குரோதம் உண்டு , போரின் பெயரில் அப்பாவி ஜனங்களை கொன்று குவிப்பது கூட உண்டு. ஆனால் அரசியலில் பொய்மையின் அளவு மிக குறைவு. மன்னராட்சியில் எதிர்த்து கேள்விகேட்பவன் தலை அடுத்த கணமே துண்டிக்கப்படும் நிலை. அதனால் ஆள்பவர்களுக்கு பொய்யை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. மக்களாட்சியில் உண்மை தெரியவந்தால் , முகத்திரை கிழிய வந்தால் நாற்காலிக்கு வேட்டு.

நாமெல்லாம் அறிந்த கலிங்கத்து போரில் இறந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் . இது போக வீரர்கள் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேல் . இதில் எங்கும் பொய்யில்லை. ஏனென்றால் அசோகரின் கல்வெட்டுகளே இதற்க்கு சாட்சி. வலிமை வாய்ந்த மௌரிய பேரரசும் ஒரு நாள் முடிவுக்கு வந்து அதன் மிச்சம் சொச்சம் இல்லாமல் அழிந்து போனது.

இன்றும் அதே போல் ஒரு போர் . ஆனால் அதைவிட கொடுமையாக .ஆளும் அரசும், அதன் ராணுவமும்  சொந்த மக்களின் மீதே போரை நடத்தி ஆயிரமாயிரம் பேர் ஒரு புறம் இறக்க, மறுபுறம் அதே தேசத்தின் வேறு இன மக்கள் அதை இனிப்பு கொடுத்து , ஆடி பாடி கொண்டாடும் கொடுரம் . பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்று விட்டு , அதை மூடி மறைக்க ஒரு பொய்க்கு பாடை கட்டி படம் பிடித்து ஒரெல்லாம் பரப்பி மக்களாட்சி என்ற ஒன்றை அசிங்கபடுத்துகிறது ஆளும் அரசு.
கண்ணுக்கு தெரிந்த எதிரியை கூட உடனே கொன்று விடலாம் . காற்றில் கலந்துவிட்ட பொய்மை என்ற எதிரியை கொல்வது கடினம். ஆனால் கொல்லவேண்டியது நன்மக்களின் கடமை.

DBG262_SRILANKA-WAR-_0422_1ஈழபிரச்சனையில் 99 சதவித ஊடகங்கள் பொய்களைத்தான் பரப்புகிறது. தமிழ் நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வென்றதிர்க்கும் , ஊடகங்கள் உண்மையை மறைத்து பொய் பிரச்சாரம் செய்தது தான் காரணம்.  இந்த பொய்களை வெல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்பதை போராளிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தில் என்ன நடந்தது , என்ன நடக்கின்றது என்பதை இன்று வரை முழு உண்மை உலகிற்கு தெரியாமல் போனது தான் போராளிகளின் இந்த மாபெரும் தோல்விக்கு காரணம். ஊடகத்தின் மூலம் பெருவாரியான உலகமக்களிடம் ஈழபிரச்சனைகளை கொண்டு சேர்ப்பது எங்ஙனம் என்று குறித்து தான் அவர்கள் இனி சிந்திக்க வேண்டும். வெறும் ஆயுதங்களை குவிப்பதும், அடுத்த போர் குறித்து சிந்திப்பதும் மட்டும் இருக்க கூடாது. யூதர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கும் போது, இருக்கும் நாட்டை கைபற்றுவது முடியாத ஒன்று இல்லை.

ஆயுதத்தை மறந்துவிட்டு இன மக்களை ஒன்றிணைத்து வலுவான மக்கள் இயக்கமாக மாற்றி , நாட்டுக்கொரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்து , அவர்கள் மூலம் அந்தந்த நாட்டு மக்களிடம் பிரச்சனைகளை கொண்டுசேர்த்து , அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களில் விவாதிக்க வைத்து ( இது கடந்த சில மாதங்களாக நடந்தது என்றாலும் , போரை முடித்து வைப்பது மூலம் உலக மக்களை இந்த பிரச்சனையில் இருந்து இலங்கை அரசு திசை திருப்பிட செய்த முயற்சியில் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டது , ஆனால் முழுதுமாக உலகம் இந்த திசை திருப்பலில் திரும்பிவிடும் முன் தமிழ் இனம் முழித்து கொள்ள வேண்டும் ) ஐநா சபையிலும் விடாது விவாதத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே ஈழம் சாத்யம்.